புதன், 26 அக்டோபர், 2016

தினமணிக் கவிதைகள் -2

தீபாவளி (6) முதல் இன்று புதிதாய்ப் பிறந்தோம்(10) வரை




6. தீபப் பெருவிழா போற்றுவோம்!

தெய்வக் கண்ணனைக் கொண்டாடும்இந்தத்
  தீபா வளித்திரு நாளினிலே
பொய்மை இருட்டினைப் போக்கிடுவோம்நம்
  புந்தி எனுமகல் விளக்கெடுத்தே !

குளிக்கும் நீரினில் கங்கையெனஅன்பு
  கொடுக்கும் நற்குணம் பொங்குகவே !
களிப்பைப் பகிர்ந்திடும் நன்னாளில்நாம்
  அளிப்போம் உதவியை வறியவர்க்கே!

அரக்கன் நரகனின் வதத்தினிலேஉதவி
  அளித்த பாமையை மறப்போமா?
கருணை காட்டிடும் தாய்க்குலமும்தீக்
  கயமை அழிப்பதில் முன்வரட்டும் !   

வெட்டிச் செலவுகள் தவித்திடுவோம்இன்று
  வெடிப்போம் சினத்தினைப் பட்டாசாய்!
நட்பின் சுடர்களைத் தூண்டிடுவோம்இந்
  நாட்டின் பெருவிழாப் போற்றிடுவோம் !

07-11-15 

7. . தேர்தல்

தேர்தல் முடிந்து போச்சு தம்பி!
  திரையும் தூக்கி ஆச்சு!
தில்லு முல்லு திரைப்ப டத்தைத்
  திடுக்கி டாமல் பாரு!

வாக்குத் தேடி வீடு வந்த
  மனிதர் மறைந்து போவார்!
சாக்குப் போக்கு சொல்லி வாக்கைத்   
. . தட்டிக் கழிப்பார் பாரு!

எனக்குக் கல்வி ஒன்றே தெய்வம்
  என்ற வெற்றி வீரர்
தினமும் மறைவாய் லக்ஷ்மி பூஜை
  செய்யும் காட்சி பாரு!

இனிமேல் ராம ராஜ்யம் தருவேன்
  என்று சொன்ன ஹீரோ
சினிமா முடிவில் வில்ல னாதல்
  சினப்ப டாமல் பாரு!


விளக்கு மாறு பழசாய்ப் போனால்
  வேலை செய்யு மாப்பா?
களைத்த மக்கள் புதுசு வாங்கக்
  காத்தி ருத்தல் பாரு!
  
17-11-15

8. நெல்மணி, கற்றோர் ; சிலேடை

உண்மை உழைப்பால் உயர வளர்வதால்,
தண்மைப் பணிவுடன் சாய்தலையால்மண்ணுலகில்
பல்லோர் பசி*தீர்க்கும் பண்பால், அகச்சத்தால்,
நெல்மணிக்குக் கற்றோர் நிகர்.

* (வயிற்று/அறிவு)ப் பசி
23-11-15 

9. பேயெனப் பெய்யும் மழை 


"வானம்பார் பூமியென்றெம் மண்ணுலகை ஏன்படைத்தாய்?!”

வானத்தை எட்டியதே மழைவேண்டும் கதறல்கள்.


சொக்கட்டான் நிறுத்திவிட்டுத் துயருற்ற தேவிக்குப்

பக்கத்தில் இருந்தவனோ பதிலிறுத்தான் சலிப்புடனே.


“ஒருகாசு கொடுத்தாலென்? ஒருகோடி கொடுத்தாலென்?

உருப்படியாய்ச் சேமிக்கத் தெரியாத மக்களுக்கு! “


“போதாதோ ஒருசூடு புத்தியுள்ள மாட்டுக்கு?

தாதாவே! தந்திடுவாய்! “ தர்மபத்னி சொல்கேட்ட


மாயவனும் ஆழிமழை வருணனுக்கோர் ஆணையிடப்

பேயெனவோர் கனமழையும் பெய்ததுகாண் சென்னையிலே!
             30-11-15

10. இன்று புதிதாய்ப் பிறந்தோம்


இன்று புதிதாய்ப் பிறந்தோம் – எம்
   எஞ்சிய வாழ்விற் கிதுவே முதல்நாள் ”
என்றே தினமும் உரைப்போம் ! – நம்
    யந்திர வாழ்வின் சுமையைக் குறைப்போம்!

துன்பத்தின் வேரைத் தகர்ப்போம் ! – நம்
   சோர்வை மறக்கக் கரங்கள் இணைப்போம் !
அன்பின் பெருமை உணர்வோம்! – எமை
   ஆளும் நெறியாய் அவிரோதம் ஏற்போம்!

பார்க்க ஒளிர்ந்திடும் யாவும் – பொற்
   பாளத் துகள்கள் எனவெண்ணல் வேண்டா!
தேர்வுகள் செய்திடக் கற்போம்! – நல்ல
   தேன்மலர் தேடிடும் வண்டுகள் போல!

முப்பால் தினமும் குடிப்போம்! – நம்
   முன்னோரின் நூல்களைப் பட்டாய் மதிப்போம்!
ஜப்பான் மொழியையும் கற்போம் – மேலைச்
   சாத்திரச் சாற்றை வாழ்வில் கலப்போம்!

மின்வான் தனிலே உலாவி – விண்
   மீன்கள் பறித்துத் தமிழில் பதிப்போம்!
வன்பால் சகத்தினை மாற்றி – நம்
   வாழ்வின் வளத்தைப் பெருக்குவோம் வாரீர்!


[ நன்றி: http://www.dinamani.com/kavithaimani/  ]

தொடர்புள்ள பதிவுகள் :


கருத்துகள் இல்லை: