வியாழன், 9 மே, 2013

பாடலும் படமும் - 5: திருப்புகழ்க் காட்சி

சித்திரம் வரையும் செவ்வேள்



இன்றைய ‘யூட்யூப்’ உலகில் , ஒரு காணொளிக் காட்சியைப் பார்த்து, “சித்திரம் பேசுதடீ” என்று பாடினால் அதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆனால், இத்தகைய  “பேசும் படத்தை” அன்றே முருகன் வரைந்தார் என்று அருணகிரிநாதர் பாடுவது ஒரு கவித்துவமான கூற்று அல்லவா? அந்தக் காட்சியைக் காட்டும் ஒரு சித்திரத்தைப் பார்ப்பதும் அழகுதானே? ஓவியங்களுக்குகந்த இத்தகைய மனங்கவரும்  பல காட்சிகள் திருப்புகழில் கொட்டிக் கிடக்கின்றன!

“ கொந்துவார்” என்று தொடங்கும் திருத்தணித் திருப்புகழில் வரும் ஒரு பகுதி:



செண்ப காடவி யினுமித ணினுமுயர்
      சந்த னாடவி யினுமுறை குறமகள்
      செம்பொ னூபுர கமலமும் வளையணி     புதுவேயும்
இந்து வாண்முக வனசமு ம்ருகமத
      குங்கு மாசல யுகளமு மதுரித
      இந்த ளாம்ருத வசனமு முறுவலு               மபிராம
இந்த்ர கோபமு மரகத வடிவமு
      மிந்த்ர சாபமு மிருகுழை யொடுபொரு
      மிந்த்ர நீலமு மடலிடை யெழுதிய        பெருமாளே.


இதன் பொருள் ( ‘தணிகைமணி’ டாக்டர் வ.சு. செங்கல்வராய பிள்ளை அவர்களின் உரையிலிருந்து ) :


செண்பகக் காட்டிலும், (தினைபுனத்துப்) பரண் மீதும், உயர்ந்த சந்தனக் காட்டிலும் உறைந்த குறமகள் (வள்ளியின்) செம்பொன்னாலாய சிலம்பணிந்த மலரடிகளையும், வளையல்கள் அணிந்த புதுமூங்கில் அனைய தோள்களையும் 

சந்திரனை ஒத்த  (குளிர்ந்த) ஒளி வீசும் முகமென்னும் தாமரையையும், கஸ்தூரி, குங்குமம் இவை அணிந்த மலையன்ன இரண்டு கொங்கைகளையும், இனிமை இன்பம் தருவதான பண் இந்தளம் ( நாதநாமக்கிரியை) போன்ற அமிருத மொழிகளையும், பற்களையும், அழகுவாய்ந்த 

தம்பலப் பூச்சி (இந்த்ர கோபம்) போன்ற (சிவந்த) வாயிதழ்களையும், பச்சை நிறத்தையும், இந்த்ர சாபம் (இந்த்ர வில்- வானவில்) போன்ற புருவத்தையும், இரண்டு காதணியாம் குழைகளைத் தூக்குகின்ற இந்த்ர நீலம் ( நீலோற்பல மலர்)  போன்ற கண்களையும் மடலின் கண் எழுதி (மகிழ்ந்த) பெருமாளே! 

வள்ளியின் பல அங்கங்களை வரைவது சிரமமல்ல ;  

“ஆனால் எழுதுதற்கு அரிதான வள்ளியின் “ இந்தளாம்ருத வசனத்தையும்” எழுதினார் என்கிறார் அருணகிரியார். இது முருகன் திறத்தைக் காட்டுகிறது. அவர் நினைத்த காரியங்கள் எவற்றையும் நிறைவேற்ற வல்லவர்.”   


என்கிறார் தணிகைமணி.


இந்தக் கருத்தை வலியுறுத்த, புறநானூற்றில் உள்ள ஒரு பாடல்(56) ஆசிரியர்  அரசனைப் பார்த்துச் சொல்லும்  ஓர் அழகான மேற்கோளையும் நம்முன் வைக்கிறார் தணிகைமணி.


முருகு ஒத்தீயே முன்னியது முடித்தலின்! “  


ஆம், “ நினைப்பதை  முடிப்பதில் நீ முருகனைப் போலிருக்கிறாய்” என்று அரசனைப் புகழ்கிறார் அந்தப் பாடல் ஆசிரியர்! 


ஓசை முனிவர் அருணகிரியின் பாடலையும், புறநானூற்றுப் பாடல் மேற்கோளின் அழகையும்,  திருப்புகழ் அன்பர்களின் வெள்ளி விழா மலரின் அட்டைப்படத்தில் வந்த அழகிய சித்திரத்துடன் சேர்ந்துப் பார்த்து, ரசித்து  மகிழலாம்! 


தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

1 கருத்து:

venusrinivasan சொன்னது…

முருகன் என்றால் அழகு
அந்த அழகே விரும்பும் பேரழகி வள்ளி
வள்ளியின் இ்ந்திரநீலக் கண்களை வரைந்த
மகா சித்திரக்காரன் முருகன்.
அவன் நினைத்ததை முடிப்பவன்
அவனை நினைத்தவர்களுக்கும்
முடித்துக்கொடுப்பான்.