செவ்வாய், 5 மார்ச், 2013

தென்னாட்டுச் செல்வங்கள் - 8

’விகடனின்’ நூல்கள் : ஒரு விமர்சனம்




நண்பர் ஒருவரின் வேண்டுகோளுக்கிணங்கி , விகடன் அண்மையில் வெளியிட்ட “ தென்னாட்டுச் செல்வங்கள்” நூல்களைப் பற்றிய என் கருத்துகளை வெளியிடுகிறேன்.

’சில்பி-தேவன்’ இருவருக்கும் காணிக்கையாகத் “ தென்னாட்டுச் செல்வங்கள்” என்ற தொடரை நான் 2012, நவம்பர் 30-இல் தொடங்கியபோது , இப்படி எழுதினேன்.

 “எப்படித் தொடர்கதைகள் மூல ஓவியங்களுடன் அச்சில் வரவேண்டும் என்று நான் விரும்புகிறேனோ, அது போலவே ‘சில்பியின்’ அமர ஓவியங்களும் ‘தேவ’னின் எழுத்துகளுடன் வருவது தான் சிறப்பு என்பது என் கருத்து. ’’

என் ஆசையை விகடன் நிறைவேற்றி விட்டது! “தென்னாட்டுச் செல்வங்கள்” என்ற நூல் இரண்டு பகுதிகளில் இப்போது வெளியாகிவிட்டது. வாழ்த்துகள்! பாராட்டுகள்! என் கையில் நூல்கள் இப்போதுதான் கிடைத்தன. அவற்றைப் பற்றி ஒரு சிறு விமர்சனம் இதோ.

கோவில் சிற்பங்கள் என்ற நம் செல்வங்களில் ஆர்வம் உள்ள யாவரும் கட்டாயம் வாங்கவேண்டிய நூல்கள் இவை. ‘சில்பி’யின் ரசிகர்கள் யாவரும் போற்றிப் பாதுகாக்கவேண்டிய பொக்கிஷங்கள் இவை.  மிகுந்த அக்கறையுடன் ‘விகடன்’ வெளியிட்டிருக்கிறது. மீண்டும் , என் பாராட்டுகள்! பல ஆண்டுகளாக என்னைப் போன்ற பல ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நூல்கள் இவை!

முதல் பாகத்தில் : மதுரை முதல் சிதம்பரம் வரை 30 இடங்கள்; இரண்டாம் பாகத்தில் ஸ்ரீரங்கம் முதல் ஹளேபீடு வரை 9 இடங்கள். இரண்டு பாகங்களிலும் மொத்தம் பக்கங்கள் 896. கோபுலு, பத்மவாசன், டாக்டர் எம்.வி.ஆச்சால் மூவரின் விசேஷக் கட்டுரைகள் ‘சில்பி’யைப் பற்றிய பல அரிய தகவல்களைத் தருகின்றன. ( கோபுலுவின் திருமணத்தில் ‘சில்பி’ குடை பிடிக்கும் காட்சி, காஞ்சி பெரியவருடன் சில்பி போன்ற படங்கள் அருமை!)

என்னிடம் உள்ள இவற்றின் மூலங்கள் சிலவற்றையும்,  நூலில் உள்ளவற்றையும் விரைவாக  ஒப்பிட்டுப் பார்த்தபோது , என் கண்ணில் பட்ட , நூலில் செய்யப்பட்ட சில மாறுதல்களைப் பதிவிட விரும்புகிறேன்; பிற்காலத்தில் ஆய்வாளர்க்கு உதவலாம்.

சில கட்டுரைகளுக்குத் தலைப்புகள் புதிதாய்க் கொடுக்கப் பட்டிருக்கின்றன. உதாரணமாக,   தெ.செ. 2 கட்டுரைக்குக் “கர்ணார்ஜுனர் போர்!” என்ற பொருத்தமான தலைப்பு ( பக்கம் 34) காணப் படுகிறது.  சில சொற்கள் அங்கங்கே ( தற்கால வழக்கிற்கேற்ப ?) சிறிது மாற்றப் பட்டிருப்பதாய்த் தெரிகின்றன. ( ஒரு காட்டு: “ தெ.செ. -2 கட்டுரையில் “ இந்த ஸகோதரர்கள் “  இந்த சகோதரர்கள்” என்று மாற்றப் பட்டுள்ளது. கூடவே “இந்தச் சகோதரர்கள் “ என்று ஓர் ஒற்றைச் சேர்த்திருந்தால் சரியாக இருந்திருக்கும்! )  நூலுக்காகச் செய்யப்பட்ட மாறுதல்களைப் பதிப்புரையில் குறிப்பிட்டிருக்கலாம். கூடவே, ஒவ்வொரு கட்டுரையின் அடியிலும் கட்டுரை வந்த தேதியையும் குறிப்பிடலாம். ஆய்வாளருக்கு இவை உதவும். ( சில தலைப்புகளில் உள்ள ஒற்றுப் பிழைகளை அடுத்த பதிப்பில் களையலாம்: உதாரணம், “உலகளந்தக் கதை” பக்கம் 823) .  மூலக் கட்டுரைகளின் எண் வரிசைப்படியே முழுதும் தொகுக்காமல் , அங்கங்கே சிலவற்றை மாற்றி , இடங்களுக்குப் பொருந்தும்படி அழகாகத் தொகுக்கப்பட்டிருப்பதாய்த் தெரிகிறது.

கட்டுரை எழுதப்பட்ட காலத்தைக் குறிக்கும் பகுதிகள் மூலத்திலிருந்து நீக்கப் பட்டனவோ என்ற ஐயம் தோன்றுகிறது. உதாரணமாக, குடுமியா மலைச் சிற்பத்தைப் பற்றி என்னிடம் உள்ள  மூலக் கட்டுரையில் ( நூலில் பக்கம் 638) ரா.பி.சேதுப்பிள்ளை ராஜாஜி மண்டபத்தில் நடந்த ஒரு    கூட்டத்தில் பேசியதைப் பற்றிய ஒரு குறிப்புக் காணப்படுகிறது. ஆனால், நூலில் இந்தக் குறிப்பு நீக்கப் பட்டுவிட்டது.

‘சில்பி’யின் முப்பத்திரண்டு முழு வண்ணப் படங்களைச் சேர்த்தது ஒரு சிறப்பு. இவை விகடன் மலர்களில் வந்தவை என்று நினைக்கிறேன். அந்தச் சிற்பங்கள் உள்ள கோவில்களைப் பற்றிய விளக்கக் கட்டுரைகளையும் சேர்த்திருந்தால் நூல்கள் மேலும் சிறப்புற்றிருக்கும். ( ‘சில்பி’யின் வண்ண ஓவியங்கள் வந்த தீபாவளி மலர்க் கட்டுரைகள் யாவும் இன்னும் தொகுக்கப் படவில்லை என்று தோன்றுகிறது.)

’சில்பி’யின் மூலப் படங்கள் பலவும் வண்ணப் படங்கள் தாம்; முழுதும் வண்ணமாக இல்லாமலிருந்தாலும், பின்புலத்தில் வண்ணம் இருக்கும். (நான் இட்ட சில படங்களைப் பார்த்தால் புரியும்). நூலில் இவை யாவும் வெறும் ‘கறுப்பு-வெள்ளை’ப் படங்களாகப் பதிவு செய்யப் பட்டுள்ளன. நூலின் விலையைக் கட்டுப்படுத்த இவ்வாறு செய்திருக்கலாம்.

பதிப்புரையில் , “ பல்வேறு விதமான ஆராய்ச்சிகளுக்கும், தொல்பொருள் தொடர்பான நூல் வடிவங்களுக்கும் துணை புரியும் அற்புதத் தொகுப்பு இது”. என்று சொல்கிறார் ஆசிரியர். முக்காலும் உண்மை. கூடவே, தமிழ் எழுத்து நடை ஆராய்ச்சிக்கும் இந்நூல்கள் உதவும்.

காட்டாக, ‘கோபுலு’ நூலில் உள்ள ஒரு கட்டுரையில் சொல்கிறார்:

“ (சில்பி) தான் வரைந்த சிலைகளைப் பற்றிய குறிப்புகளை ஒரு தாளில் எழுதிக் கொண்டுவந்து , அந்தப் படங்களைப் பற்றி தேவனிடம் விளக்கிச் சொல்வார். தேவன்தான் அதை நயமாக எழுதுவார்”

கோபுலு இப்படிச் சொல்லியிருப்பதால், பதிப்புரையிலும் இந்தக் கட்டுரைகளை எழுதியவர்(கள்) யா(வ)ர் என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கலாம். 1948- முதல் 1961-வரை “தெ.செ” தொடர் வந்தது என்று பதிப்புரை சொல்கிறது.
  கிட்டத்தட்ட 300-315 கட்டுரைகள் வந்தன என்று எண்ணுகிறேன். அப்படியானால், ‘தேவன்’ 1957-இல் காலமான பிறகு, ‘சில்பி’யின் குறிப்புகளைக் கட்டுரைகளாக வடித்தவர் யார் என்ற கேள்வி எழுகிறதல்லவா? எனக்குத் தெரிந்தவரை: 1957-க்குப் பிறகு , பி.ஸ்ரீ. ஆசார்யா தான் இக்கட்டுரைகளை எழுதினார் என்று நினைக்கிறேன்.  இப்படிப்பட்ட தகவல்களையும் பதிப்புரையில் ஆசிரியர் குறிப்பிட்டிருக்கலாம்.
 ‘சில்பி’யின் அற்புதக் குறிப்புகளை ஆதாரமாக வைத்து அழகான கட்டுரைகளை எழுதிய தேவன், பி.ஸ்ரீ இருவருக்கும் நம் நன்றிகளைத் தெரிவிப்போம். ( எந்தத் தெ.செ. கட்டுரையை ‘தேவன்’ கடைசியாய் எழுதினார் என்று கேட்கத் தோன்றுகிறது ... பதில் கிடைக்குமா?)

‘நிறைகள்’ பல இருக்கும் இந்நூல்களில் ஒரே ஒரு குறை மட்டும் என்னை மிகவும் உறுத்துகிறது. இது ‘விகடனின்’ ‘காலப் பெட்டகம்’ ‘பொக்கிஷம்’ என்ற அரிய நூல்களிலும் (மேலும் பல தமிழ் நூல்களிலும்)  இருக்கும் அதே குறை தான். நூல் இறுதியில் “குறிப்பகராதிப் பட்டியல்” இல்லாத குறைதான் அது. கணினி வசதிகள் இருக்கும் இக்காலத்தில், இவற்றைத் தயாரித்து , சில பக்கங்கள் சேர்த்தால், இந்நூல்களின் பயன்பாடுகள்  பல மடங்குகள் அதிகரிக்கும். அடுத்த பதிப்பில், இப்படி ஒரு “குறிப்பகராதி” யைச் சேர்ப்பார்கள் என்று நம்புகிறேன். (  இத்தகைய ஆங்கில நூல் ஒன்றுகூட குறிப்பகராதி இல்லாமல் பதிப்பிக்கப் படாது. தமிழ் நூல்களும் இந்த நல்ல அம்சத்தைக் கையாள வேண்டுகிறேன். )

ஆனால், மகிழ்ச்சியான ஒரு விஷயம்: ‘தேவன்’ விகடனின் பொறுப்பாசிரியராக இருந்தபோது , அவருடைய ஒரு நூலும் வெளிவரவில்லை என்பது யாவரும் அறிந்ததே. இப்போது, ‘தேவ’னின் எழுத்து மிளிரும் ஒரு நூலை ‘விகடன்’ முதன்முறையாக வெளியிட்டது மகிழ்ச்சிக்குரிய விஷயம் தானே? இதைத் தொடர்ந்து, ‘தேவ’னின் நூற்றாண்டு வருஷமான இந்த ஆண்டில் ‘தேவ’னின் மற்ற படைப்புகளையும், மூல ஓவியங்களுடன் ‘விகடன்’ வெளியிடுமாறு வேண்டுகிறேன்.

இன்னொரு விஷயம்: நான் இப்போது, பி.ஸ்ரீ. அவர்களுக்குக் காணிக்கையாக, அவர் எழுதிய  “சித்திர ராமாயணம்” என்ற தொடரிலிருந்து சில கட்டுரைகளை இந்த வலைப்பூவில்  இட்டு வருகிறேன். உடனே, விகடன் ’சித்திர ராமாயணம்’ நூலைச் ‘சித்திரலேகா’வின்  ஓவியங்களுடன்  வெளிக்கொணர்ந்தால், என்னைவிட மகிழ்பவர்கள் இருக்க முடியாது! :-))

இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த ஓவியர்’ சில்பி’. விகடனின் பொறுப்பாசிரியராய் இருந்து ‘தேவன்’  செய்த பணிகளில்  மிகச் சிறந்தது இந்தக் கலை, இலக்கியத் தொடரை எழுதியது. பி.ஸ்ரீயின் தொண்டும் மறக்க முடியாது. இவை யாவும் ஒளிரும் இந்நூல்களை வெளியிட்ட ‘விகடன்’ நிறுவனத்திற்கு என் நன்றி.

கடைசியாக, ஒரு தென்னாட்டுச் செல்வங்கள் கட்டுரையில் தேவன் எழுதியதை ( ஆனால் நூலில் இல்லாத ) ஓர் அபிப்ராயத்தை இங்கிட்டு  இந்த விமர்சனத்தை நிறைவு செய்கிறேன்.


காவியங்களையும், தென்னாட்டுத் திருக்கோயில்களிலுள்ள சிற்பங்களையும் ஓரளவாவது கற்று ஓவியப் புலவர்கள் தங்கள் கலையை வளர்ப்பது நலமாகும் என்பது நமது அபிப்ராயம்”.

நூல்கள்; தென்னாட்டுச் செல்வங்கள் ( பாகங்கள் 1, 2)
விலை: ரூபாய். 650 ( இரண்டு பாகங்கள் சேர்த்து)
பதிப்பகம்: விகடன்
விகடன் பிரசுரம்: 674.

=====

தொடர்புள்ள பதிவுகள்:

தென்னாட்டுச் செல்வங்கள்


3 கருத்துகள்:

ananth சொன்னது…

பயனுள்ள கருத்துகள் கொண்ட அருமையான ஆய்வு.

அனந்த்

Pas S. Pasupathy சொன்னது…

நன்றி, அனந்த்.

சங்கரன் சொன்னது…

அருமையான விமர்சனம், கட்டுரை.

சங்கரன்