சனி, 30 மார்ச், 2013

சங்கீத சங்கதிகள் - 17

விருத்தம் பாடுவது எப்படி? 
கல்கி

விருத்தம் பாடுவது ஒரு கலை. தேர்ந்தெடுத்த ராகத்திற்கேற்ப ஒரு விருத்தத்தை அந்த ராகத்தின் அழகு முழுதும் வெளிப்படப் பாடுவோர் இன்றைய இசையுலகில் மிகக் குறைவே. விருத்தம் பாடுவதில் ஓதுவார்கள் நிபுணர்கள். பாடலில் உள்ள நெடில், குறில், மெய்யெழுத்து இவற்றைச் சரியாகப் பயன்படுத்தி , ராகத்தின் சங்கதிகளை இசைப்பது கேட்போர் மனத்தை உருக்கும். ( தமிழிலக்கணத்தில் உள்ள இன்னிசை அளபெடைக்கும் சங்கதிகளுக்கும் உள்ள தொடர்பு சிந்திக்கத் தகுந்தது.) வார்த்தைகளை அவசரமாய் அள்ளித் தெளித்துவிட்டு, ‘தரன்னா’ என்று நெடிய ராக ஆலாபனை செய்வது 'விருத்தம்' அன்று; வெறும் 'வருத்தம்' தான்!

அண்மையில் ‘கல்கி’ அவர்கள் ‘ எஸ்.ஜி.கிட்டப்பாவின் ஓர் இசைத்தட்டு  பற்றிய விமர்சனத்தில் விருத்தம் பாடுவதைப் பற்றி எழுதியதைப் படித்து வியந்து போனேன். அவர் எழுதியது ’ஆனந்தவிகட’னில். 30-களில் என்று நினைக்கிறேன்.


இதோ ‘கல்கி’ !

“ .... முக்கியமாக, ஸ்ரீமான் கிட்டப்பா சங்கீதத்தின் ஜீவன் எது என்பதை இயற்கையறிவால் உணர்ந்தவர் என்பதைக் குறிப்பிட வேண்டும். அவர் பாட்டிலெல்லாம், ஸாஹித்யத்தின் வார்த்தைகளுடன் இசை கலந்திருப்பதைக் காணலாம். உதாரணமாக, 

கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர் தருவே!” 

என்ற அருட்பாவை அவர் இசைத்தட்டில் பாடியிருப்பதைக் கேளுங்கள். பாவின் சொற்களும் இசையும் எப்படி ஒன்றுடன் ஒன்று கலந்து வருகின்றன? சொற்களை அப்படியே அந்தரத்தில் தொங்க விட்டு விட்டு, ராக விஸ்தாரத்தில் புகுந்து விடுகிறாரா, பாருங்கள்! கிடையாது. அங்கங்கே முக்கியமான சொற்களில் நின்று இசையமுதத்தைக் கலந்து பொழிகிறார். ‘கனியே” ‘பூங்காற்றே” “மணவாளா!” முதலிய சொற்களில் சொல்லின்பமும், பொருளின்பமும், இசையின்பமும் ரஸபாவத்துடன் கலந்து பெருகுகின்றன. 


[ சங்கீதத்தின் இந்த முக்கியாம்சத்தை நன்கு தெரிந்து கொள்வதற்கு, இந்த அம்சம் சிறிதேனும் இல்லாத இன்னொரு இசைத் தட்டை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஒரு பெரிய வித்வான் --சாரீர சம்பத்தில் இணையற்றவர் -- கொடுத்திருக்கும் “ஒருமையொடு” என்ற பிளேட்டைக் கேளுங்கள். ஒரே மூச்சில் வார்த்தைகளைக் கொட்டி ‘டும்’ என்று நிறுத்திவிட்டு, ராக விஸ்தாரத்தில் புகுந்து விடுகிறார். “பொய்மை பேசாதிருக்க வேண்டும்” என்பதில், “பொய்....” என்று நிறுத்தி ஒரு பிர்கா அடிக்கிறார். இன்னும் “பொய்மை பேசாதிருக்க வேண்டும்” “ மருவு பெண்ணாசையை மறக்க வேண்டும்” என்ற வாக்கியங்களில் , இசையின் பாவம், “ஐயோ! பொய் பேசாமல் இருக்க வேண்டியிருக்கிறதே!” “அடடா! மருவு பெண்ணாசையை அநியாயமாய் மறக்க வேண்டியிருக்கிறதே!” என்று துயரப் படுவது போலிருக்கிறது! ]

விருத்தங்கள் பாடும்போது, சொற்களையும் ராகத்தையும் இசைத்துப் பாடினால், பாலில் சர்க்கரையைக் கலந்து சாப்பிடும் ருசி ஏற்படுகிறது. வார்த்தைகளை மடமடவென்று ஒப்பித்து விட்டு, ராக விஸ்தாரத்திற்குப் போதல், சர்க்கரையை முதலில் தின்றுவிட்டு அப்புறம் பால் குடிப்பது போல்தான். இன்னும் பார்க்கப் போனால், முதலில் சர்க்கரையைத் தின்றுவிட்டு அப்புறம் சர்க்கரை போடாத காப்பி குடிப்பது போல் என்றும் சொல்லலாம்! ”
[ நன்றி: கல்கி களஞ்சியம் ]

’கல்கி’ கல்கிதான், இல்லையா?

இப்போது 70 ஆண்டுகளுக்கு முன் ‘கல்கி’ கேட்ட கிட்டப்பாவின் அந்த விருத்தத்தைக் கேட்க வேண்டும் என்று தோன்றுகிறதா? இதோ:
கோடையிலே ....பாடல்

கிட்டப்பாவைப் பற்றி நிறைய எழுதலாம். இதோ ஒரே ஒரு துணுக்கு.

நாடகமேடையில் நுழையும்போது கம்பீரமாய்ப் பாடிக் கொண்டே நுழைவது கிட்டப்பாவின் வழக்கம். அதற்காக  கம்பீரம் நிறைந்த ஒரு  தமிழ்ப் பாடல் இயற்றும்படி கிட்டப்பா ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரைக் கேட்டுக் கொள்ள, பாகவதர் ஒரு பாடலை ‘ஜோன்புரியில்’ இயற்றித் தந்தார். கிட்டப்பாவிற்காக என்றே விசேஷமாகத் தன் ’ஹரிகேச’ முத்திரையைப் பாடலில் வைக்காமல் அந்த சங்கீத மேதை இயற்றித் தந்த அந்த அழகான பாடல் இதோ! கிட்டப்பாவின் குரலில்!

ஆண்டவன் தரிசனமே --பாடல்

தொடர்புள்ள பதிவுகள்:

கிட்டப்பா ஞாபகம்


'கல்கி’ கட்டுரைகள்

சங்கீத சங்கதிகள்

2 கருத்துகள்:

UK Sharma சொன்னது…

கிட்டப்பா பாடிய "காயாத கானகத்தே" பாடலை யாராவது பகிர முடியுமா? நன்றி.

Raveenthiran சொன்னது…

பழைய பாடலைத்தேடிப்பிடித்துத் தந்தமைக்கு நன்றி. மகிழ்ந்தேன்.