ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

'தேவன்' : நினைவுகள் - 2

வாழ்க்கை வரலாறு


’தேவன்’ --ஆர்.மகாதேவன் -- 1913-ஆம் ஆண்டில் செப்டம்பர் 8-ஆம் தேதியன்று திருவிடைமருதூரில் பிறந்தவர். அதே ஊரில் இருந்த திருவாவடுதுறை ஆதீனம் உயர்தரப் பள்ளியில் படித்தார். பள்ளியில் சாரணப் படையில் சேர்ந்திருந்தார். சாரணத் தலைவர் திரு. கோபாலசாமி ஐயங்கார் பல கதைகளைச் சொல்வார்; மாணவர்களையும் கதை சொல்லச் சொல்லி ஊக்குவிப்பார். இதனால் கதை கட்டுவதில் ‘தேவ’னுக்கு ஓர் ஆர்வமும், சுவையும் தோன்றின.


பின்பு, ‘தேவன்’ கும்பகோணம் அரசாங்கக் கல்லூரியில் சேர்ந்து பி.ஏ. பட்டம் பெற்றார். அங்கே இருந்த திரு. எம்.ஆர். ராஜகோபால ஐயங்கார் என்ற ஆங்கில ஆசிரியர் மூலம் தேவனுக்கு இலக்கியத்தில் நாட்டமும், இலக்கியச் சிருஷ்டியில் ஈடுபாடும் ஏற்பட்டன. ‘மிஸ்டர் ராஜாமணி’ என்ற பெயரில் அவர் ‘ஆனந்த விகட’னுக்கு அனுப்பிய கதை அப்போது பிரசுரமாயிற்று.

தனது 18-ஆம் வயதில், ஆத்தூர் உயர்தரக் கல்லூரியில் சுமார் மூன்று மாதம் ஆசிரியராகப் பணி புரிந்தார். அந்த ஆண்டே பட்டமளிப்பு விழாவிற்குச் சென்னை வந்த ‘தேவன்’ ஆனந்த விகடன் காரியாலயத்திற்குச் சென்றார். இதோ, அவருடைய சொற்களிலேயே நடந்ததைப் பார்ப்போம்:

“ விளையாட்டாக நான் ஒரு கட்டுரை ‘மிஸ்டர் ராஜாமணி’ என்ற தலைப்பில் ஆனந்த விகடனுக்கு எழுதி அனுப்பி, அதை யாரும் கவனிக்க மாட்டார்கள் என்று அசிரத்தையாக இருந்த சமயத்தில் ‘கல்கி’ அவர்களிடமிருந்து முதலில் கடிதம் வந்தது.

அன்புடையீர்!
உங்கள் கட்டுரை ‘மிஸ்டர் ராஜாமணி’யை ஆனந்த விகடனில் பிரசுரிக்க உத்தேசித்திருக்கிறோம்.உன்களுடைய கட்டுரையின் நடையும், போக்கும் விகடனுக்கு ஏற்றதாக இருக்கின்றன. சாதாரணமாகக் காணப்படும் இலக்கணப் பிழைகளை நீக்கி எழுதப் பயிலுவது தங்களுக்கு நலம்.
தங்கள்,
ரா.கிருஷ்ணமூர்த்தி


இதற்கு ஆறு மாதங்களுக்குப் பிறகு நான் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்னைக்கு வந்திருந்தேன். அப்போது ஆனந்த விகடன் காரியாலயத்தில் ‘கல்கி’ என்பவர் எப்படி இருப்பார் என்று பார்க்கவே காரியாலயத்தினுள் நுழைந்தேன். பார்வைக்கு மிக எளிமையுடனும் பேச்சில் வெகு சௌஜன்யமாகவும் இருந்த கல்கியைக் கண்டு, “ இவரா இத்தனை அற்புதமாக எழுதுகிறார்!” என்று நான் ஆச்சரியப்பட்டது உண்மை. நான் அறிமுகம் செய்து கொண்டதும் என்னை உட்காரச் சொல்லி அவர் முதல் முதலாகக் கேட்ட கேள்வி எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது.

" கட்டுரை எழுதினீர்களே, அது நீங்கள்தான் எழுதினீர்களா? உங்கள் தகப்பனார் மற்றும் யாராவது உதவி செய்தார்களா? “ என்று அவர் கேட்டார்.

“நானேதான்!” என்று சற்றுக் கடுமையாகவே பதில் சொல்லியதும் அவர் சிரித்துக் கொண்டே, “ எதற்குக் கேட்கிறேன் என்றால், இந்த ஊரில் இருந்து கொண்டே எழுதலாமா என்பதற்குத்தான் ” என்றார். அதற்கு மேல் ஒரு நாள் அவர் கைப்பட எனக்கு ஒரு கார்டு வந்தது. நான் சற்றும் எதிபார்க்கவில்லை அதை. “ தங்களுக்கு விகடன் காரியாலயத்தில் சேர்ந்து வேலை செய்யச் சம்மதம் இருக்குமானால் புதன்கிழமை காலை பதினோரு மணிக்கு வரவேணுமாய்க் கோருகிறேன்” என்ற விஷயம் அதில் வந்தது.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் ஒரு கட்டுரையில் தேவன் உதவி ஆசிரியராய்ச் சேர்ந்த வரலாற்றை இப்படி விவரிக்கிறார்.

“ அவர் முதல் முதல் எழுதிய மாஸ்டர் ராஜாமணியை, ஆம், அந்தக் குஞ்சுப் பயல் ராஜாமணியை அழைத்துக் கொண்டு, தான் வேலை பார்க்கும் துரைமகனிடம் சென்ற அவனது மாமா, அங்கு அந்த ராஜாமணி குறும்பாகப் பேசிய மழலை மொழிகளை எல்லாம், தமிழே அறியாத துரையிடம் மொழி பெயர்க்கும் விதத்தைப் படித்துப் படித்து இருபத்தைந்து வருஷங்களுக்கு முன், நான் சிரித்ததை எல்லாம், சொன்னபோது அவர் சொன்னார். “ஆம், அந்த மாஸ்டர் ராஜாமணி தான், சார், எனக்கு ஆனந்த விகடனில் வேலை தேடிக் கொடுத்தான். அவன் தான் என்னை ஆசிரியர் ‘கல்கி’யிடமும் திரு வாசனிடமும் அறிமுகம் செய்து வைத்தான்” என்றார். மேலும் சொன்னார். “அந்தக் கட்டுரையைப் படித்த ‘கல்கி’க்கு ஒரு சந்தேகம். அது என் சொந்தச் சரக்குத் தானா என்று. ஆதலால் அதைத் தொடர்ந்து ஒரு கட்டுரையை, அங்கே அவர் பக்கத்தில் கிடந்த மேஜை அருகிலேயே உட்கார்ந்து அப்பொழுதே எழுதும்படிச் சொன்னார். எழுதிக் கொடுத்தேன். அதன் பிறகே என்னை ஒரு உதவி ஆசிரியனாக அமர்த்தினார் “ என்றார். “

அதன்பின் ஒன்பது வருஷங்கள் ( 1933-42) கல்கியின் வலது கையாகப் பணியாற்றினார் தேவன். ஆரம்ப நாட்களில் ‘சரஸ்வதி காலண்டர்’ , ‘எங்கள் ஊர்ச்சந்தை’ முதலிய கதைகளை தேவன் எழுதியபோது, கல்கி அவரை மிகவும் பாராட்டி நேயர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

தன் அனுபவங்களைத் தேவன் ‘கல்கி என்னும் காந்த சக்தி’ என்ற கட்டுரையில் இப்படிச் சொல்கிறார்:

“ கல்கியிடம் என் பக்தி ஒரு புறம் இருக்க, ஒரு பயமும் உண்டு. ‘இத்தனை பெரிய எழுத்தாளரிடம் எப்படி நாம் எழுதுவதை வைப்பது?’ என்று நான் அஞ்சியிருக்கிறேன். ஒரு சமயம் இப்படித்தான் பயந்து கொண்டு, “எங்கள் ஊர்ச்செய்திகள்” என்று ஒரு கட்டுரையை வைத்துவிட்டு, கீழே அச்சாபீஸுக்குள் அடைக்கலம் புகுந்து கொண்டேன்.

சற்று நேரத்துக்கெல்லாம் கூப்பிட்டார். போனேன். என் கட்டுரையைக் கையில் சுருட்டி வைத்துக் கொண்டு, “இதை நீயா எழுதினே?” என்றார். “ஆமாம்!” என்று சொன்னேன். “நீ போகலாம்!” என்றார்.

சற்று நேரத்துக்கெல்லாம் ‘கல்கி’ ஒரு உபயகுசலோபரி எழுதிக் கொண்டிருந்தார். ‘ஷீட்’’ஷீட்டாக அச்சகத்துக்கு வந்து கொண்டிருந்தது. நான் படித்துப் பார்த்தேன்.”இந்த இதழில் ‘எங்கள் ஊர்ச்செய்திகள்’ என்றொரு கட்டுரை பிரசுரமாகியிருக்கிறது. நேயர்கள் அதை மிகவும் ரசிப்பார்கள் என்று நான் அறிவேன். அதை எழுதியவர் இருபது வயது நிரம்பாத ஓர் இளைஞர் என்றால் எத்தனை ஆச்சரியப்படுவீர்கள் என்றும் நான் அறிவேன்....” இதைப் படித்தபோது --இன்றுபோலவே -- அன்றும் நான் கண்ணீரைக் கொட்டி விட்டேன்.எத்தனை பெரிய அறிமுகம்!”

இதோ, வேறொரு சமயம், ‘கல்கி’ தேவனைப் பற்றி 29.4.1934 விகடன் இதழில் எழுதியது:

“ஒரே ஒரு கட்டுரையினால், ஒரே நாளில் தமிழ்நாடெங்கும் பிரசித்தியாகி விட்டவர். அல்லது, அவருடைய மருமான் ‘மிஸ்டர் ராஜாமணி’ அவரை பிரசித்திபடுத்தி விட்டான் ...நமது நாட்டில் இவ்வளவு குதூகலத்துடன் குழந்தைகளின் வாழ்க்கையைப் பற்றி எழுதும் இந்த ஆசாமி யார்? .. என்று எண்ணி வியப்படைந்தேன்... குழந்தைகளின் அற்ப சந்தோஷங்களையும் துக்கங்களையும் பற்றி மட்டுமல்ல; வயதான மனிதர்களுடைய மகா அற்ப சுக துக்கங்களையுப் பற்றியும் அவ்வளவு குதூகலத்துடன் எழுதக் கூடியவர்தான் என்று தேவன் காட்டிக் கொண்டு வருகிறார்... ”

விகடனிலிருந்து கல்கி விலகியதும், தேவன் சுமார் ஓராண்டு காலம் உதவி ஆசிரியராய் இருந்து பின்னர் 1942 முதல் நிர்வாக ஆசிரியராகப் பணி புரிந்தார்.

த.நா.குமாரஸ்வாமி எழுதுகிறார் ( ‘உயர்ந்த மனிதர், விகடன் பொன்விழா மலர், 1980):

”கொள்கை வேற்றுமையால் கல்கி விகடனிலிருந்து விலகி விட்டார். வாசன் அவர்கள் இதனால் இடிந்து போகவில்லை. பத்திரிகையின் பெரும் பொறுப்பைத் தேவனிடம் முழு நம்பிக்கையுடன் ஒப்படைத்தார். பலர் அஞ்சினர். தேவன் என்ன சாமானியர், கல்கியைப் போல் ஒரு வார இதழை நடத்துவதற்கான ஆற்றலோ அனுபவமோ உள்ளவரோ என்று. 1942-ஆம் ஆண்டிலிருந்து 1957-இல் தம் உயிர் போகும் வரை விகடனை எவ்வளவு செம்மையாகத் தேவன் நடத்தினார் என்பதற்கு ஒவ்வோர் ஆண்டும் வெளிவந்த தீபாவளி மலரும், அவருடைய நவீனங்களும், கட்டுரைகளும், சிறுகதைகளும் சான்று பகரும்.”

‘கல்கி’ தனிப் பத்திரிகை தொடங்கியபோது, தேவனும் விகடனை விட்டுவிட்டுக் கல்கியில் சேர்ந்திருக்கலாமே என்ற கேள்வி எழலாம். இந்தக் கேள்வியைத் த.நா.குமாரஸ்வாமி தேவனிடம் கேட்டபோது, தேவனின் பதில் இதோ:

“இன்னும் அந்த மாமேதையிடம் எனக்கு நீங்காத பற்றுள்ளது. ஆனால் நான் இரண்டாம் நிலையிலேயே வாழ்நாளெல்லாம் எவ்வாறு இருப்பேன்..என் காலில் நிற்க வேண்டாமா? என் இலக்கியச் சாதனைக்கு ஏற்ற நிலைக்களனும் தனிச் சூழலும் வேண்டாமா? நான் அவருக்கு எவ்வகையிலும் துரோகம் செய்யவில்லை. எழுத்துத் துறையில் எனக்கிருந்த அச்சத்தைப் போக்கி, என்னை வளர்த்து உருவாக்கினவர் அவர். அவரை என்றும் மறவேன்.

விகடனில் 23 ஆண்டுக் காலம் பணி புரிந்த தேவன் ஐந்நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், நூற்றுக்கணக்கான நகைச்சுவைக் கட்டுரைகள், இருபதுக்கும் மேற்பட்ட தொடர்கள் எழுதினார்.


துப்பறியும் சாம்பு இவரது பிரபலமான நகைச்சுவை நாவல்; இது சின்னத் திரையிலும் வந்தது. இவருடைய நாவல்களில் கோமதியின் காதலன் மட்டும் திரைப்படமாக வெளியாயிற்று. இவர் எழுதிய கோமதியின் காதலன், மிஸ் ஜானகி, மிஸ்டர் வேதாந்தம், ஜஸ்டிஸ் ஜகந்நாதன், கல்யாணி, மைதிலி, துப்பறியும் சாம்பு முதலிய பத்துப் படைப்புகள் மேடை நாடகங்களாகப் பல இடங்களில் நடிக்கப் பட்டன. அநேகமாக நாடக வசனங்களை அவரே எழுதினார்.மிஸ்டர் வேதாந்தம், ஸ்ரீமான் சுதர்சனம் என்ற இரண்டு நாவல்களும் இயக்குநர் ஸ்ரீதர் தயாரிப்பில் சின்னத்திரையிலும் வழங்கப்பட்டன.

ஐம்பதுகளில் இவர் அயல்நாட்டுச் சுற்றுப் பயணங்கள் மேற்கொண்ட போது எழுதியது ’ஐந்து நாடுகளில் அறுபது நாள்’ என்ற கட்டுரைத் தொடர். தேவன் சென்னை தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இரு முறை பதவி வகித்திருக்கிறார்.ஜஸ்டிஸ் ஜகந்நாதன் நாவல், 1974 இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது.

அண்மையில் அல்லையன்ஸ் பதிப்பகம் தேவனின் பல படைப்புகளை வெளியிட்டுள்ளது. கிழக்குப் பதிப்பகமும் தேவனின் பல நூல்களைச் செம்பதிப்புகளாக வெளியிட்டுள்ளது.

தேவன், தமது 44-ஆவது வயதில், 1957 மே 5 ஆம் தேதி அன்று மறைந்தார்.

தொடர்புள்ள பதிவுகள்:

தேவன் நினைவு நாள், 2010

தேவன் நினைவுகள் -1

தேவன் படைப்புகள்

துப்பறியும் சாம்பு

பி.கு.

ஆசுகவி சிவசூரியின் பின்னூட்டம்:

தேவன் சீர்

ஆயிரத்துத் தொளாயிரத்துப் பதிமூன் றென்னும்
  ஆண்டுவந்த செப்டம்பர் எட்டாம் நாளில்
பாயுமது போலெழுத்தால் படிப்போர் தம்மைப்
  பரவசத்தில் தள்ளவென்றே சிரிப்பாம் தேனில்
தோய்த்தெடுத்துக் கதைபலவே சொல்ல வென்றே
  துறுதுறுக்கும் எழிலார்ந்த தோற்றம் கொண்டே
சேயெனவே திருவிடையான் மருதூர் தன்னில்
  திருவருளால் மகாதேவன் தோன்றி னாரே!

அம்பி,விச்சு, காயத்ரி, மயூரம்,கேட்டை
  ஆரெமென்றும் சிம்மமென்றும் தேவ னென்றும்
அம்புவியில் பேர்பலவும் பூண்டோ ராக
  அனுதினமும் நமைமகிழ்த்த எழுதித் தள்ளி
நம்மனத்தில் நீங்காத இடத்தில் வாழும்
  நற்றமிழர் மகாதேவன் நூற்றாண் டைநாம்
அம்மையப்பன் அருளாலே கொண்டாடும் வேளை
  அவர்புகழைப் பாடியின்பம் கொள்வோம் வாரீர்!

சிவ சூரியநாராயணன்.

2 கருத்துகள்:

Siva Suryanarayanan சொன்னது…

தேவன் சீர்

ஆயிரத்துத் தொளாயிரத்துப் பதிமூன் றென்னும்
ஆண்டுவந்த செப்டம்பர் எட்டாம் நாளில்
பாயுமது போலெழுத்தால் படிப்போர் தம்மைப்
பரவசத்தில் தள்ளவென்றே சிரிப்பாம் தேனில்
தோய்த்தெடுத்துக் கதைபலவே சொல்ல வென்றே
துறுதுறுக்கும் எழிலார்ந்த தோற்றம் கொண்டே
சேயெனவே திருவிடையான் மருதூர் தன்னில்
திருவருளால் மகாதேவன் தோன்றி னாரே!

அம்பி,விச்சு, காயத்ரி, மயூரம்,கேட்டை
ஆரெமென்றும் சிம்மமென்றும் தேவ னென்றும்
அம்புவியில் பேர்பலவும் பூண்டோ ராக
அனுதினமும் நமைமகிழ்த்த எழுதித் தள்ளி
நம்மனத்தில் நீங்காத இடத்தில் வாழும்
நற்றமிழர் மகாதேவன் நூற்றாண் டைநாம்
அம்மையப்பன் அருளாலே கொண்டாடும் வேளை
அவர்புகழைப் பாடியின்பம் கொள்வோம் வாரீர்!

சிவ சூரியநாராயணன்.

Pas S. Pasupathy சொன்னது…

மிக அருமை, சிவசூரி!